சுயநினைவற்றவர் தர்சானந்த் – யாழ். பழக்கடை வியாபாரிகள் போர்க்கொடி.!
ஒவ்வொரு மாதமும் குறளிவித்தை காட்டி தன்னை பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் சுயநினைவற்றவர் தர்சானந்த் என குற்றம் சாட்டியுள்ள யாழ். நகர பழக்கடை உரிமையாளர்கள், நீதிமன்றின் உத்தரவில் தமக்கு அன்றைய ஈ.பி.டி.யின் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட கடைகளை காழ்புணர்ச்சியின் காரணமாகவே அகற்ற முயற்சிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபையின் உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்த்து யாழ். மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் மாநகரை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை இன்றையதினம் (13) முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது இவ்வாறு கருத்து தெரிவித்த அவர்கள் மேலும் கூறுகையில்,
நாம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம். ஆனால் எமது நிலையை மாநகரின் உறுப்பினர் தர்சானந்த் உணரவில்லை. அவர் சுயநினைவின்றியே இருப்பதாக தோன்றுகின்றது. அவரது இந்த பிரேரணையால் அவர் தனக்கு ஊடக விளம்பரத்தை தேடலாம். ஆனால் எமது வாழ்வியலை இழகச் செய்துதான் தனது விளம்பரத்தை தேடக்கூடாது. இவ்வாறான உறுப்பினரை தேர்ந்தெடுத்தது அப்பகுதி மக்களின் தவறாகவே நினைக்கின்றோம்.
எனவே, எமக்கு உரிய தீர்வு தராது எமது கடைகளை அகற்றினால் நாம் குடும்பங்களுடன் மாநகரை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் தெரிவித்தனர்.

