மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா.!
மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்துக் கல்லூரியில் உள்ள தண்டாயுதபாணி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மாணவர்களினால் கிறிஸ்தவ வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து தேசியக்கொடி, பாடசாலை கொடி, பழைய மாணவர்கள் கொடியேற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து கல்லூரியின் ஸ்தாபர் நல்லையா மாஸ்டரின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமான என்.தனஞ்செயன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் இந்துக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள ஊட்டப் பாடசாலைகளில் பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் 80ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பழைய மாணவர் சங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருமளவான மாணவர்கள், பழைய மாணவர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியானது 1946ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முன்னாள் கல்குடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நல்லையா மாஸ்டர் என்பவரினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









