வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா.!
மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் அமைந்துள்ள உழவர் சிலை முன்பாக கழகத் தலைவர் ம.ஐங்கரன் தலைமையில் நேற்று 24.01.2026 காலை சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது கிராம பாரம்பரிய முறைப்படி தமிழர்களின் கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப, வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டில்கள் சகிதம் பொங்கல் பானைகள், விவசாய உபகரணங்கள் என்பன உழவர் பெருமையை எடுத்தியம்பும் வண்ணம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் அமைந்துள்ள உழவர் சிலை முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு சூரியபகவானுக்கு வழிபாடுகள் இடம்பெற்றது.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம், ஆசியுரை தலைமையுரை, அதிதிகள் உரை, விவசாயிகள் கெளரவிப்பு மற்றும் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் அவர்களின் பிரதான இணைப்பாளருமான த. பிரபாகரன், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மா.ஜெயம்பலம் குருக்கள், வந்தாறுமூலை மேற்கு கிராம உத்தியோகத்தர், வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், முன்னாள் கழக உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வந்தாறுமூலை மகா விஷ்ணு, நீர்முகப் பிள்ளையார் ஆலய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.





