திருகோணமலையில் வீதிக்கு இறங்கிய வர்த்தகர்கள்.!
திருகோணமலை மாநகர சபையின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் இன்று (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி வழியாக மாநகர சபை வரை சென்றது. அங்கு மாநகரசபை கட்டிடத்திற்கு முன்பாக திரண்ட வர்த்தகர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வர்த்தகர்கள், வீதியோர வியாபாரிகளை தடை செய், வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து, உள்ளூர் வர்த்தகம் – உள்ளூர் வளர்ச்சி, தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சிலர் மாநகரசபை முதல்வரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வர்த்தக சங்க பிரதிநிதி புர்ஹான் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது தற்காலிக வியாபாரிகளிடம் மாநகர சபையினால் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு முறையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதால், உடனடியாக அவற்றை இரத்து செய்ய முடியாதுள்ளதாகவும் எனினும், வருங்காலங்களில் உள்ளூர் வர்த்தகர்களைப் பாதிக்காத வகையில் அனுமதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
மேலும், மாநகரசபையின் வருமானம் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்பில் உள்ள நெருக்கடிகள் குறித்தும் முதல்வர் இதன்போது தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.




