திருப்பூர் குமரன் குன்று கோவிலை அகற்ற முயற்சி; எதிர்த்து போராடிய இந்து முன்னணியினர் 200 பேர் கைது.!
திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்தபோது, ஹிந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். நிர்வாகிகள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்றில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர்.மக்கள், பக்தர்கள், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.