நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!
நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.
இப் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்கள் நிறைந்து கழிவு நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் பாதசாரிகள் வீதியில் நடந்து செல்ல முடியாது பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகர், ஹவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல, போன்ற இடங்களில் தொடர்ந்து கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகின்றன.
மேலும் இன்று (20) அதிகாலை முதல் மழையுடன் கூடிய அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், வாகனங்களுக்கு இடையிலான தூரத்தை அவதானிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்தால் வீதிகளில் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வேகத்தைக் குறைத்து, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்லுமாறு போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளை வலியுறுத்தியுள்ளனர்.


