புதுக்குடியிருப்பில் காணியற்ற 437 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசேயலாளர் பிரிவில் குடியிருப்பதற்கு காணிகளில்லாத 437குடும்பங்களுக்கும் விரைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்படும் சந்தர்பங்களில், காணி அற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், சட்டவிரோதமானமுறையில் அதிகளவான காணிகளைக் கையப்படுத்தியுள்ளோரையும் அந்தக்காணிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், அதன்பின்னர் அந்தக் காணிகளையும் காணி அற்றோருக்கு பிரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பதிலளித்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரவிக்கையில்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 437பேருக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லை. காணிகளற்ற அந்த மக்கள் என்ன செய்வது. அந்த மக்களுக்கும் காணிகள் வழங்கப்படவேண்டும்.
காணிகளற்ற அந்த மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக அனர்த்த நிலைமைகளின்போது காணிகள் அற்ற அந்த மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டால் உரிய கொடுப்பனவுகளையோ, நிவாரணங்களையோ பெற்றுக்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் காணப்படுகின்றது. அத்தோடு வீடுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகின்றது.
எனவே காணியற்றோருக்கு விரைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார்.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பதிலளிக்கையில்,
எமக்கு 437பேருக்கு காணிகளை வழங்கவேண்டிய தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
அந்த 437பேருக்கும் காணிகளை வழங்குவதற்கு இரண்டு தெரிவுகள் காணப்படுகின்றன.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்பிரிவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அந்தக் காணிகளை காணி அற்றோருக்கு வழங்க முடியும்.
அதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவில் அதிகளவு காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்திருப்போருக்கெதிராக பிரதேசசெயலகம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது.
அதற்கமைய அவ்வாறு சட்டவிரோதமாக அதிகளவு காணிகளை கைப்பற்றி வைத்திருந்த 49பேரை காணிகளிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக காணிகளை சட்டவிரோதமாக கையகப்ழடுத்தி வைத்திருப்பவர்களை நீதிமன்றம் விரைவாக வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
எனவே அந்தக்காணிகளும் அரச காணிகளாக மாறும்போது அந்தக்காணிகளையும் காணி அற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – என்றார்.