புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!
இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் ‘G-CSF’ எனும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் 1,90,000 தடுப்பூசி பாட்டில்கள் அரசாங்க மருந்தகக் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சுமார் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இம்மருந்துகள் உரிய லேபிள் (Label) வழிகாட்டல்கள் இன்றி வந்ததால், விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு நோயாளிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள், இந்த இறக்குமதி தொடர்பான முறையான அனுமதிகள், தரச்சான்றிதழ்கள் மற்றும் லேபிள் விபரங்களை வெளிப்படுத்தாமல் உண்மைகளை மறைப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஒரு மருந்தை இறக்குமதி செய்யும்போது NMRA இன் அனுமதி, தரச்சான்றிதழ்கள் மற்றும் லேபிள் பரிசோதனைகள் கட்டாயமானவை ஆகும். ஆனால் 250 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் சரியான லேபிள் இன்றி சுங்கத்திலிருந்து விடுக்கப்பட்டது, அதிகாரசபையின் கண்காணிப்புத் குறைபாட்டையும் நிர்வாகத் தோல்வியையும் காட்டுகிறது.
மேலும், மருந்துப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக அமைச்சரும் அதிகாரசபை தலைவரும் கூறினாலும், கள நிலவரப்படி வைத்தியசாலைகளில் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் நோயாளிகளுக்கு முழுமையான மருந்தளவை வழங்க முடியாமல் வைத்தியர்கள் சிரமப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது சுகாதார அமைப்பின் வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்துவதுடன், புற்றுநோயாளிகளின் உயிரோடு விளையாடும் வகையில் மருந்துக் கொள்முதல் தாமதமடைவதும், தரமற்ற அல்லது லேபிள் இல்லாத மருந்துகள் அனுமதிக்கப்படுவதும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளே தற்போதும் முக்கிய பதவிகளில் நீடிப்பதாக தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ, உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும், தட்டுப்பாடின்றி தரமான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.