அரசாங்கத்தின் ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு.!
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தம் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சாமர சம்பத் அவர்களிடம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்ததாகவும், இதுவரை எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்குத் தமிழரசு கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும்.
போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுபானசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறினார்.
மேலும், இந்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றும், அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போது முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.