புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு
கலஹா, நில்லம்ப, குருகலே பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (02) மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, சமையலறையில் இருந்த புளியை எடுத்து விளையாடியதாகவும், அப்போது புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அறிந்ததும், சிறுமியின் தாயாரும் உறவினர்களும் உடனடியாக செயற்பட்டு, சிறுமியை பேராதனை போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமியின் உடலம் தற்போது பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.