ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை
இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி கோடிக்கணக்கான பணம் மற்றும் சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளவர்களில் இரு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இரு அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது இந்த 10 அரசியல்வாதிகளுக்கும் ஷிரான் பாசிக் அவ்வப்போது பெருமளவு பணத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆட்சியில் பதவி வகித்த முக்கிய அமைச்சர் ஒருவர், ஷிரான் பாசிக்குக்கு அனுமதியற்ற முறையில் காணிகளை நிரப்பி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுத்துவிட்டு அவரிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஷிரான் பாசிக்கிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புகளைப் பேணிச் சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையிலும், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள் தொடர்பிலும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான மற்றும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.