பரீட்சார்த்திகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனர்த்த முகாமைத்துவ மையம் நடவடிக்கை.!
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பரீட்சைகளின் போது அசம்பாவிதங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் தேவையான உத்தியோகத்தர்களுடன், நிவாரண உபகரணங்களும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
நிலவும் காலநிலை நிலவரத்திற்கு மத்தியில் எதிர்வரும் மூன்று நாட்களும் மிகவும் தீர்மானமிக்கவை என அனர்த்த முகாமைத்துவ மையத்தின் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கான பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் மற்றும் போக்குவரத்து வழிகளை தடையின்றி பேணுவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீர் பெருக்கு காரணமாக பரீட்சை மையங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், படகுகள் மற்றும் விசேட பாதுகாப்பு வாகனங்கள் மூலம் மாணவர்களைப் பாதுகாப்பாக பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்துச் செல்ல விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு அல்லது மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பரீட்சார்த்திகள் ஏதேனும் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117, பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கம் அல்லது 011 2136136, 011 2136222, 011 2136223 ஆகிய விசேட தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.