விசேட தேவையுடையோரின் பயண சிரமங்களுக்கு தீர்வாக வடக்கில் விரைவில் மெட்ரோ பஸ் சேவை.!
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து பெருமளவான நோயாளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், மன்னார் – யாழ்ப்பாணம், வவுனியா – யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் ஆகிய பிரதான வழித்தடங்களில் குறைந்தது நாளாந்தம் ஒரு மெட்ரோ பஸ் சேவையையாவது ஏற்படுத்தினால், பல நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையோர் பெரும் பயனை பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.
இது நடைமுறைப்படுத்தப்படுமா என நேற்றைய (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் அவர்கள் தனது வாய்மூல கேள்வி நேரத்தின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க, எதிர்வரும் ஆண்டில் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் இவ்வாறான சேவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் என்றுமில்லாதவாறு டெங்கு நோயின் தாக்கம் காணப்படுவதாகவும் நீர் வழிந்தோடும் கால்வாய்கள், கான்கள் துப்பரவு செய்யப்படாமல் அவற்றில் கழிவுப்பொருட்கள் தேங்குவதாலும் கால்வாய்கள் மற்றும் கான்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் நோய்நிலை மோசமடையக்கூடிய சாத்தியக்கூறுகள் வலுவடைவதால் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் கால்வாய்கள் மற்றும் கான்களை துப்பரவு செய்யவும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து திட்டமொன்றை முன்வைக்க முடியுமா எனவும் கேள்வியெழுப்பினார்.
ஏனெனில் கால்வாய்கள் கான்கள் துப்பரவு செய்யும் பணியில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. வீதிகளை பராமரிக்கும் திணைக்களங்கள் அவற்றை துப்பரவு செய்யும் பணி தமக்குரியது அல்ல என்றும் அது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு என கூறும் அதேவேளை உள்ளூராட்சி மன்றங்களோ தற்போதுள்ள ஆளணி மற்றும் நிதிவளங்களை கொண்டு அப்பணியை தம்மால் செய்யமுடியாதுள்ளது என அபிவிருத்திக்குழு கூட்டங்களில் விவாதிக்கிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், அதன் சாத்தியப்பாடு தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.
மேலும், வீதியோரங்களில் நீண்டகாலமாக காணப்படும் பெரும் மரங்கள் அண்மைக்காலமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வெட்டி அகற்றப்படுகின்றன. வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரிக்கும் திட்டம் ஏதும் தங்களிடம் உள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், அவ்வாறான திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.