வவுனியா மேயர் நீக்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு.!
வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மாநகர மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனு, நேற்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் பிரதிவாதிகளான வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி தனது சமர்ப்பிப்புகளை முன்வைத்தார்.
பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தமக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் கோரினார். மேலும், மனுதாரருக்குச் சாதகமாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணங்களை (தடை உத்தரவு) கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் மன்றுரைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை நீடித்த நீதிமன்றம், வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.