கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!
அநுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) புதன்கிழமை காலை உந்துருளி ஒன்றும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற “சிசு செரிய” பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் என மூன்று பேர் பயணித்த உந்துருளி, எதிரே வந்த பாடசாலை மாணவர்களுக்கான “சிசு செரிய” பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, உந்துருளியில் பயணித்த இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலன்னறுவை பகுதியிலிருந்து தங்களது நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக வந்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்த மற்றுமொரு நண்பருடன் சேர்ந்து மூவருமாக உந்துருளியில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.