மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற போசணை மாத கண்காட்சி.!
போசணை மாதத்தையொட்டி மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாடு செய்த தேசிய போசணை மாத கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (9) காலை மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் கலந்து கொண்டார்.
இதன்போது ‘சிற்றுண்டிகளை பற்றி மீளச் சிந்திப்போம் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பாரம்பரிய சிற்றுண்டிகளை தெரிவு செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்தும், கையடக்க தொலைபேசியினால் ஏற்படும் சாதக பாதக நிலை குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது விழிப்புணர்வு நிகழ்வும் போசணை கண்காட்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.









