உள்ளூராட்சி மன்றங்கள் என்பது தனிநபரின் நிறுவனம் அல்ல.!
உள்ளூராட்சி மன்றங்கள் தனி நபர்களின் சொந்த நிறுவனங்கள் அல்ல. தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் பொது மக்களின் கருத்துகளுக்கு செவி சாய்த்தும், மதிப்பளித்தும் செயற்பட வேண்டும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்கள் பொது மக்களின் வரிப்பணத்தாலும் நம்பிக்கையாலும் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் சேவைக்கான நிறுவனமாகும். எனவே, அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் சட்ட விதிமுறைகளுக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் 2018 இல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நோர்வூட் பிரதேச சபை கடந்த ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குள்ளாகவே மக்களின் நம்பிக்கையை இழந்து கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பிரதேச சபைத் தலைவர் என்பவர் பக்கச் சார்பின்றி மக்கள் சேவைக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோட்பாட்டை மறந்து செயற்பட்டு வருகின்றார்.
குறிப்பாக தற்போதைய சபைத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை (7) மாதாந்த அமர்வின் போது அவர் மேற்கொண்ட நிர்வாக அணுகுமுறை உறுப்பினர்களிடையே கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதேச சபையின் ஊடாக அபிவிருத்திப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து 14 உறுப்பினர்கள் மாதாந்த அமர்வைப் புறக்கணிக்கும் நிலை உருவாகியிருந்தது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலதில் மேலும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. அத்தோடு, சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது, தற்போதைய நிலைமை குறித்து தலைவர் தீவிரமாக கவனம் செலுத்தி சிந்தித்து செயற்பட வேண்டியதை புலப்படுத்தியுள்ளது.
மேலும், சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சில நடவடிக்கைகள், சபையின் மரபு ரீதியான நடைமுறைகள், உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற சட்ட ஒழுங்குகள் தொடர்பாக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை உரிய முறையில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
சபைக்குத் தலைமை தாங்கும் மக்கள் பிரதிநிதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எதிர்க்கருத்துகளுக்கு மதிப்பளித்து கலந்துரையாடல் மூலம் சுமூகமான தீர்வுகளைக் காண்பதே ஜனநாயக தலைமைத்துவத்தின் அடையாளமாகும்.
எனவே, நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் தனது நிர்வாக செயற்பாடுகளில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தி, வெளிப்படைத் தன்மை, சட்ட ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும் என்பதே உறுப்பினர்களதும் பொது மக்களதும் எதிர்பார்ப்பாகும் என்பதை உணர்ந்து நோர்வூட் பிரதேச சபையின் கௌரவத்தையும், கண்ணியத்தையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமையும் பொறுப்பும் ஆகும்.