மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் (03) இடம்பெற்றது.
மருதக் கலைஞர்களின் குடும்ப குதூகல நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில், விழிப்புணர்வூட்டும் வகையிலான நாடகங்கள், கவிதைகள், பாடல்கள், அபிநயம் என நிகழ்வை மெருகூட்டின.
போதையால் மனிதன் படும் இன்னல்கள் மற்றும் வட்டி கலாசாரத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றை வலியுறுத்தி, அதிலிருந்து மீளும் வகையிலான நாடகங்கள் நிகழ்வில் அரங்கேற்றப்பட்டு, அதிதிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
எமது சமூகத்தை சீரழிக்கின்ற சமூக சீர்கேடுகளை எமது சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்டும் நோக்கிலும் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் வந்திருந்த அதிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட பலரது பாராட்டையும் பெற்றன.
இந்நிகழ்வில், மருதமுனையின் சிறந்த கலைஞரும் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரருமான ஆரிப் ஆதம்பாவா டில்மானி பாறூக் கலைத்துறையில் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்புக்காகவும், அவரது அயராத சேவைக்காகவும் மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் பொன்னாடைகள் போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.



















