டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனை நடவடிக்கையில் சிக்கிய மூவருக்கும் தலா 120,000 ரூபாய் வீதம், மொத்தம் 3,60,000 (மூன்று இலட்சத்து அறுபதாயிரம்) ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் (CI) விஜேரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகன சோதனையின் போதே இந்த பேருந்துகள் முற்றுகையிடப்பட்டது.
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் எமது செய்தியாளரிடம் குறிப்பிட்டனர்.
மேலும், டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.










