வவுனியாவில் மக்கள் காணிகள் கையகப்படுத்தல் குற்றச்சாட்டு – எம்.பி. சத்தியலிங்கம் ஆய்வு.!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பழையவாடி புளியங்குளம் பகுதியில், வனவள திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் இன்று (25.03.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் குறைகேள் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், வனவள திணைக்களத்தினரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணிகளை நேரில் பார்வையிட்டார்.மேலும், இந்த விடயம் தொடர்பாக மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்), வனவள திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மக்கள் காணிகளை மீளப் பெறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
