புதன்கிழமை விடுமுறையில் வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் – பொலிஸ் தலையீடு.!
போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த விடுமுறை தினத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்ட சம்பவம் ஹட்டன் பகுதியில் பதிவாகியுள்ளது.
ஹட்டன் ஹிஜிராபுர பகுதியில் உள்ள திறந்தவெளி இடமொன்றில், அப்பகுதியின் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.அரசின் கல்வி அமைச்சின்சுற்றுநிருபங்களை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்திய பொலிஸார், உடனடியாக வகுப்புகளை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்து, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
புதன்கிழமைகளில் எந்தவிதமான பிரத்தியோக வகுப்புகளையும் நடத்தக்கூடாது என கல்வி அமைச்சு ஏற்கனவே கடுமையான சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இவ்வாறான மேலதிக வகுப்புகள் நடைபெறுகின்றன என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இனி இதுபோன்ற செயல்கள் தொடருமானால் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.