ஹட்டன் டிக்கோயா நகர சபையில் பதற்றம்; முன்னாள் தலைவர் வெளிநடப்பு.!
ஹட்டன் டிக்கோயா நகர சபையில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற சபை அமர்வின் போது கடும் பதற்ற நிலை ஏற்பட்டது. நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில், நகர சபை உறுப்பினரும் முன்னாள் தலைவருமான அழகுமுத்து நந்தகுமார் சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
மக்கள் பிரச்சினைகள் குறித்து கடும் குற்றச்சாட்டு.
8சபை அமர்வின் போது உரையாற்றிய உறுப்பினர் அழகுமுத்து நந்தகுமார்,
கடந்த 9 மாதங்களாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமை.
குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குப்பை மேலாண்மை பிரச்சினைகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது,
என கடுமையாக குற்றம்சாட்டினார்.
வார்த்தைப் பிரயோகம் சர்ச்சை
இந்நேரத்தில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சபையில் இருந்த பிற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் சபையில் பரபரப்பு நிலை உருவானது.
முன்னாள் தலைவர் அழகுமுத்து நந்தகுமார் சபையிலிருந்து வெளியேறிய பின்னரும், தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள்,
“சபை அமர்வில் இவ்வாறான தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது ஏற்க முடியாதது” என்று கண்டனம் வெளியிட்டனர்.
வெளிநடப்பு
“பயனற்ற சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நேரத்தை வீணாக்குவதை விட, என் தனிப்பட்ட பணிகளை கவனிப்பது சிறந்தது” என தெரிவித்து உறுப்பினரும் முன்னாள் தலைவருமான அழகுமுத்து நந்தகுமார் சபையை புறக்கணித்து வெளியேறினார்.
இந்த சம்பவம் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயற்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் நகர சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் மந்த கதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.