சுமார் 51 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!
சுமார் 51 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 09:50 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
சந்தேக நபரால் கொண்டு வரப்பட்ட இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மான்செஸ்டர் ரகத்தைச் சேர்ந்த 170 சிகரெட் கார்ட்டூன்கள் இதன்போது கைப்பற்றப்பட்டன. இதில் மொத்தம் 34,000 சிகரெட்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர் எதிர்வரும் 11ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.