கொட்டகலை புனித பத்திமா ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு.!
தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தினை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூரும் புனித சிலுவைப்பாதை நிகழ்வு கொட்டகலை புனித பத்திமா தேவாலயத்தில் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அடிகளார் மற்றும் பங்கு மக்களின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கொட்டகலை புனித பத்திமா தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து கொட்டகலை நகர் வழியாக இயேசு கிறிஸ்து தனது வாழ்வின் இறுதி நாட்களில், தண்டனை விதிக்கப்பட்டது முதல் சிலுவையில் உயிர் துறந்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது வரை, அவர் சந்தித்த துன்பங்களை நினைவு கூர்ந்து, 14 நிலைகளாக தியானித்து கொட்டகலை லொக்கில் அந்தோனியார் திருசொரூபம் வரை சென்று சிலுவைப்பாதை நிகழ்வு நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து லொக்கில் அந்தோனியார் திருச்சொரூப முன்றலில் பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத்தந்தை ரன்ஜித லக்ஷான் ஆகியோர் இணைந்து விசேட ஆராதனை பூஜை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு தலவாக்கலை, கொட்டகலை ஆலய பங்குகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


