ஜி.எஸ்.பி. பிளஸ் நீட்டிப்புக்கு பிரான்ஸ் ஆதரவு கோரிக்கை – ஜனாதிபதி அநுரகுமார மக்ரோனைச் சந்திப்பு.!
இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு வலுசேர்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘பொது சலுகைத் திட்டம் கூடுதல்’ வரிச்சலுகையை 2026க்கு பின்னரும் தொடரச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து நேரடி ஆதரவை கோரியுள்ளார்.இந்த சந்திப்பு இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இலங்கைக்குக் கிடைத்து வரும் இந்த வரிச்சலுகை 2026 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. குறிப்பாக ஆடைத் தொழில் மற்றும் இறப்பர் உற்பத்தித் துறைகளுக்கு ஐரோப்பிய சந்தையில் சுங்கவரி இல்லாமல் அல்லது குறைந்த சுங்கவரியுடன் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை இந்தச் சலுகை வழங்கி வருகிறது.வரிச்சலுகை நீட்டிப்பிற்கானவிண்ணப்பத்தை இலங்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதற்கு பிரான்ஸ் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், 2026க்கு பின்னரும் வரிச்சலுகையைத் தொடர்வதற்குத் தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.இந்த வரிச்சலுகையைத் தக்கவைக்க பயங்கரவாதத் தடைச் சட்ட திருத்தம் உள்ளிட்ட 27 சர்வதேச ஒப்பந்தங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில், பிரான்ஸ் போன்ற முக்கிய உறுப்புநாடுகளின் ஆதரவு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.