போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
கொழும்பு, வாழைத்தோட்டம் – சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் அமைந்துள்ள இருண்ட மற்றும் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சட்டத்தரணி ஒருவர் கெசல்வத்தை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், களுபோவில – சரணங்கர வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 130 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், அதனை உட்கொள்ள பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் சட்டத்தரணி அடையாள அட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைத்தோட்டம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த இருண்ட கைவிடப்பட்ட கட்டிடத்திற்குள் நுழைந்து மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபர் ‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையை பரிசோதித்த போது, அவர் 1996ஆம் ஆண்டு சட்டத்தரணியாகப் பதவியேற்ற நபர் என்பதும், புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சட்டதரணி என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.