விஜயின் ‛ஜனநாயகன்’ டிரைலர் வெளியீடு!
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2 நிமிடம் 52 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரைலர் முழுவதும் ஆக்ஷன், கமர்ஷியல் அம்சங்கள் மற்றும் அரசியல் கருத்துக்களால் நிறைந்ததாக அமைந்துள்ளது. விஜய் இதில் ‘வெற்றி’ என்ற பெயருடைய காவல் அதிகாரியாகவும், அன்பான தந்தையாகவும் நடித்துள்ளார். அவரின் மகளாக மமிதா பைஜு நடித்துள்ளார்.வில்லனாக பாபி தியோல் நடிக்கும் நிலையில், அவரது கும்பலால் மமிதாவுக்கு பிரச்சினை ஏற்பட, அதனை எதிர்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்வதாக விஜய் களமிறங்குகிறார் என்பதே படத்தின் மையக் கதையாக தெரிகிறது.
இதனுடன் நாட்டின் பாதுகாப்பு, அரசியல்வாதிகளின் ஊழல் போன்ற விடயங்களும் படத்தில் முக்கியமாக பேசப்படுகின்றன.டிரைலரில் விஜய், மமிதா பைஜு, பாபி தியோல், அரசியல்வாதி வேடத்தில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பிரதானமாக தோன்றுகின்றனர். பிரியாமணி, பூஜா ஹெக்டே, நாசர், நரேன் ஆகியோரும் சில காட்சிகளில் இடம்பெறுகின்றனர். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் மறுஆக்கம் (ரீமேக்) என கூறப்படும் நிலையில், அந்தப் படத்துடன் தொடர்புடைய பல அம்சங்கள் இதில் காணப்படுவதாக டிரைலர் சுட்டிக்காட்டுகிறது.
“தளபதியை தொட்டுறாதே ஸ்லைஸ் போட்டு விடுவேன்… நான் சாதாரண மனிதன் தான், ஆனா செய்கிற காரியம் சூப்பராக இருக்கும்… உன்னை காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேன் என்று சொல்வவன் யாராக இருந்தாலும் சரி, திரும்பிப் போகும் ஐடியாவே இல்லை, ஐயம் கம்மிங்… மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரச் சொன்னால், கொள்ளையடிக்கவும் கொலை செய்யவுமா அரசியலுக்கு வருகிறீர்கள்?” போன்ற விஜயின் மாஸ் பஞ்ச் வசனங்கள் டிரைலரில் இடம் பெற்றுள்ளன.
விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் அவர் முன்வைக்கும் அரசியல் விமர்சனங்கள், அவர் எதிர்கொள்ளும் அரசியல் சார்ந்த சவால்கள் ஆகியவை இந்தப் படத்தில் பல இடங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக டிரைலரில் உள்ள வசனங்களே அமைந்துள்ளன.எது எப்படியிருந்தாலும், விஜயின் கடைசிப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மாஸ் என்டர்டெயினராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. டிரைலர் வெளியான அரை மணிநேரத்துக்குள் தமிழில் மட்டும் 20 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளதால், அந்த மொழிகளிலும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.