இலங்கை ஒரு சிக்கலான பொருளாதார மீட்சிப் பாதையில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில், இந்தியாவுடனான இணைப்பை மேம்படுத்துவது குறித்த விவாதம் முக்கிய நிலையை எட்டியுள்ளது, குறிப்பாக பாக்குநீரிணைக்கு குறுக்கே ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்தே இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், இத்தகைய பாலம் உருவாக்கப்படுவது இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் எதிர்கால செழிப்புக்கும் ஒரு திருப்புமுனையாக அமையலாம் என ஆய்வாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தெரிவிக்கின்றனர்.
பழங்காலத் தொடர்பும் வரலாற்று முயற்சிகளும்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பௌதீக இணைப்பு குறித்து வரலாறு மற்றும் புராணங்களில் வேரூன்றியுள்ளது. இராமாயணத்தில் இராமர் கட்டிய பாலமாகப் போற்றப்படும் இது, புவியியல் ஆய்வுகளின்படி, 1480 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடற்புயல் வரை இந்தப் பகுதி கால்நடையாகக் கடக்கக்கூடிய ஒரு இயற்கை நிலப்பாலமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்த இயற்கைத் தடையானது வரலாற்று ரீதியாக பாரிய அளவிலான கடல் போக்குவரத்தைத் தடுத்துள்ளது, இதனால் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய (பிரிட்டிஷ்) காலனித்துவ காலத்தில், 1870களின் முற்பகுதியிலேயே பாக்குநீரிணைக்கு குறுக்கே ஒரு தொடர்ச்சியான புகையிரத இணைப்பிற்கான திட்டங்கள் உருவானது, வர்த்தகத்தையும் தொழிலாளர் பயணத்தையும் எளிதாக்கும் நோக்குடன் இந்த திட்டம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த இலட்சிய திட்டங்கள் ஒருபோதும் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டாலும், அத்தகைய இணைப்பின் மூலோபாய நன்மைகளை நீண்டகாலமாக அங்கீகரித்ததை அவை சுட்டிக்காட்டுகின்றன. சுதந்திரத்திற்குப் பின்னரான காலகட்டத்தில், ஆழமற்ற பாக்குநீரிணை வழியாக ஒரு கப்பல் செல்லும் கால்வாயை வெட்டி, கப்பல் பயண நேரத்தைக் குறைக்கும் சேது சமுத்திர கால்வாய் திட்டம் முக்கியத்துவம் பெற்றது. இருப்பினும், இந்த திட்டம் கணிசமான சுற்றுச்சூழல் மற்றும் மத எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேர்ந்து இறுதியாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
பாலத் திட்டத்தின் நவீன மறுமலர்ச்சியும் பொருளாதாரக் கட்டாயமும்
நிலத் தொடர்பிலான பாலம் குறித்த நவீன உந்துதல் சமீப காலங்களாக மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக 2002 இல் நடந்த இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது இது முக்கியத்துவம் பெற்றது, குறிப்பாக இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளை வளர்ப்பதற்கான “அனுமான் பாலம்” குறித்த கோரிக்கைகள் மீண்டும் வெளிவந்தன. இந்த விடயத்தில் இந்தியா அப்போதிருந்தே ஒரு வலுவான ஆதரவாளராக உள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் இருநாட்டு பேச்சுவார்த்தைகள் மற்றும் முன்மொழிவுகள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றன, இது மேம்பட்ட பிராந்திய இணைப்பு குறித்த தொலைநோக்கு பார்வையால் உந்தப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டி, அதன் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான திறனை அங்கீகரித்துள்ளது.
குறிப்பாக, இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இந்த கருத்து கணிசமான உத்வேகம் பெற்றது. ஜூலை 2023 இல், இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, ஒரு கூட்டு ஆவணம் வெளியிடப்பட்டது, அதில் “முன்மொழியப்பட்ட நிலப்பாலத்திற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வை விரைவுபடுத்துவதற்கு” தெளிவாக இணக்கம் காணப்பட்டுள்ளது. இது பாக்குநீரிணைக்கு குறுக்கே, குறிப்பாக இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் இராமேஸ்வரம் (தனுஷ்கோடி) வரை, நீரிணையின் மிகக் குறுகிய புள்ளியில் ஒரு நெடுஞ்சாலை மற்றும் ரயில் இணைப்புக்கான சாத்தியத்தை ஆராய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க இருதரப்பு உறுதிப்பாட்டை எட்டியது.
பாலத்திற்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதல் பெரும்பாலும் பொருளாதாரக் கட்டாயமாக கட்டமைக்கப்படுகிறது, குறிப்பாக இது இலங்கையின் மீட்சி மற்றும் நீண்டகால செழிப்புக்கான பாதையாக வலியுறுத்தப்படுகின்றது. இது இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும், சுற்றுலாவை அதிகரிக்கும் மற்றும் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார இஸ்திரத்தன்மையை பலப்படுத்த வேண்டுமாயின் இந்தியாவுடன் இலங்கை இணைந்து பயணிக்க வேண்டும். இந்த விடயத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலத் தொடர்புகளை ஏற்படுத்தும் விதத்தில் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். இது சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தாலும், இந்த பாலம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என இந்திய – இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் சந்தோஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாயின் அந்நிய முதலீடுகளுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சர்வதேச முதலீட்டாளர்கள் எளிதாக நுழைவதற்காக வாய்ப்பையும், தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இன்று இந்தியா பொருளாதார ரீதியில் மிக வேகமாக வளர்ச்சி கண்டுவரும் நாடாக மாறி வருகின்றது. இந்தியாவின் இந்த வளர்ச்சியை இலங்கையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவை அரவணைத்து இந்தியாவுடன் சேர்ந்து வளர்ச்சியடைய வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் சிறந்த நிலையிலேயே உள்ளன. அதேபோல் இலங்கை இந்தியாவின் பொருளாதார சந்தையை இலக்கு வைப்பதை விடவும் இலங்கையில் உள்ள தரமான மற்றும் ஆரோக்கியமான விடயங்களை இந்தியா நுகர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் இலங்கையின் தரமான பொருட்களை இந்தியர்கள் அனுபவிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான இந்தியர்களே இலங்கைக்கு வருகின்றனர்
ஆண்டுதோறும் 30 மில்லியனுக்கு அதிகமான இந்தியர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்கின்றனர். அவர்களில் மிகக் குறைந்த அளவிலான இந்தியர்களே இலங்கைக்கு வருகின்றனர். ஆகவே அதிகளவில் இந்தியர்களை ஈர்க்கும் இடமாக இலங்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இலங்கையின் கண்கவர் சுற்றுலாத்தளங்களை, ரம்மியமான கடற்கரை நகரங்களை, உணவுகளை அனுபவிக்கும் சுற்றுலாத்துறையை இலங்கை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்
மேலும், இந்தியாவின் பொருளாதார சந்தையில் முதலீடு செய்ய பல்வேறு சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. குறிப்பாக இந்தியாவின் தெற்கு சந்தையை அணுக வேண்டிய நிலைமை ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கையில் இருந்து இந்தியாவை அணுகுவது குறித்தும் சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் என்னிடம் கலந்துரையாடியுள்ளன என தெரிவிக்கும் அவர், இவ்வாறான ஒரு நிலைமையில் இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் மிகவும் முக்கியமான ஒன்றாகும் என சுட்டிக்காட்டுகின்றார்.
இது சர்ச்சைக்குரிய விடயமாக மாறலாம், ஆனால் இவ்வாறான பாலம் ஒன்று கட்டப்பட வேண்டும். உண்மையில் இவ்வாறான ஒரு பாலத்தை கட்டுவதற்கு அதிகபட்சம் 12 ஆண்டுகள் எடுக்கும். இப்போது ஆரம்பிக்கப்பட்டால் கூட 2037/38 ஆண்டு காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு பாலம் அமைந்திருக்கும். அதன் வழியாக இலங்கை இந்திய பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க இலகுவாக இருக்கும். 2037/38 ஆம் ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இருக்கும். அப்போது இந்திய சந்தையை அணுக பல முதலீட்டாளர்கள் இலங்கையில் இருக்க விரும்புவார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும். ஆகவே இலங்கை இந்த விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவை அரவணைத்து செயற்படுவது சிறந்ததாகும். இந்தியா எப்போதும் இலங்கைக்கு நல்ல நண்பன் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் சந்தோஷ் மேனன் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் சாத்தியம் – சிறீதரன் எம்.பி
எமது தந்தை நாடான இந்தியாவுடன் நாம் எப்போதுமே நெருக்கமான நட்புறவை கையாளவே விரும்புகின்றோம். இத்தனை காலமாக இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்துள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் அமையும் பட்சத்தில், இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான பாலம் அமைக்கப்படும் என்றால் அதனை முழுமையாக வரவேற்கும் தரப்பாக நாம் இருப்போம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இலங்கையும் பங்குதாரராக மாறுவதுடன் இலங்கையின் வளர்ச்சிக்கு இது பாரிய அளவில் உறுதுணையாக அமையும் என நம்புவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

இப்படியான ஒரு வாய்ப்பு அமைந்தால் இரு நாடுகளின் உற்பத்தி பொருட்கள் பரிமாற்றப்படுவதுடன் சுற்றுலா மற்றும் பயணங்கள் என்பன இலகுவாக மேம்படும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியிலேயே ஏனைய அனைத்து விடயங்களும் தங்கியுள்ளன. வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் பட்சத்தில் எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவை ஏற்படாது, தமிழ் மக்களின் இருப்பு அதிகரிக்கப்படும் பட்சத்தில் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இந்தியாவின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
இவ்வாறாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாலத் தொடர்புகளை ஏற்படுத்துவது என்றால் அது தலைமன்னார்- இராமேஸ்வரம் பகுதிகளுக்கு இடையிலான தொடர்பு பாலமாகவே அமைக்கப்படும். அவ்வாறான நிலையில் மன்னார் உள்ளிட்ட வடக்கின் பின்தங்கிய பகுதிகளில் கூட பாரிய அபிவிருத்தி நிலைமை ஒன்று ஏற்படும். அத்துடன் இப்போதும் நாம் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை இந்தியாவின் ஊடாக அபிவிருத்தி செய்வது குறித்தே அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். இவ்வாறு வடக்கு கிழக்கை அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக மாற்றிக்கொண்டு ஒட்டுமொத்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும் பிரதேசங்களாக வடக்கு – கிழக்கு பகுதிகளை மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
புராணக்கதையை உண்மையாக்க வேண்டும்
அதுமட்டுமல்ல, இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் வாழ்கின்றனர். அவர்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான இணைப்புப் பாலமொன்று இருக்கும் பட்சத்தில் அவர்கள் இலகுவாக இங்கு வருவதற்கான சூழல் உருவாக்கப்படும் எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு பாலம் இருந்ததாக புராணக் கதைகளில் படித்துள்ளோம். இப்போது இவ்வாறான ஒரு பாலம் உருவாக்கப்பட்டால் நாம் படித்த புராணக்கதை உண்மையாகும். கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கத்தை ஏற்படுத்தும் என தாம் கருதுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.
நிலத் தொடர்புகளை ஏற்படுத்துவது இரண்டு நாடுகளுக்குமே ஆரோக்கியமாக அமையாது – முன்னாள் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க
இந்தியாவுடன் இலங்கை எப்போதுமே நெருக்கமான நட்புறவை பேணி வருகின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் நட்புறவை முறித்துக்கொள்ள இலங்கை முயற்சிக்காது, அவ்வாறு செய்யவும் முடியாது. இலங்கை நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்ட சகல சந்தர்ப்பங்களிலும் இந்தியாவின் ஒத்துழைப்பே முதலில் கிடைத்துள்ளது. ஆகவே அந்த உறவில் எப்போதும் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. எனினும் இந்தியா வேறு நாடு, இலங்கை வேறு நாடு. இரண்டு நாடுகளுக்குமான இறையாண்மை வெவ்வேறானது. அவ்வாறு இருக்கையில் நிலத் தொடர்புகளை ஏற்படுத்துவது இரண்டு நாடுகளுக்குமே ஆரோக்கியமாக அமையாது என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது பாலம் கட்டுவதனால் நாடு அபிவிருத்தி அடைந்துவிடும் என நினைப்பதும் தவறானது. இலங்கையின் வளர்ச்சிக்கு வித்திடும் பல காரணிகள் உள்ளன. அதில் ஒன்று இந்தியாவுடன் நட்புறவை பேணி வர்த்தக ரீதியாக வளர்ச்சி காண்பது. அதேபோல் ஏனைய நாடுகளுடனும் நட்புறவை பேணி சகலரது ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்த ரவிநாத் ஆரியசிங்க, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறையாண்மையை பலவீனப்படுத்த எந்த அரசாங்கமும் தீர்மானம் எடுக்கக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுடன் நட்புறவை கையாள பாலம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் விஜித ஹேரத்

இந்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்த இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சாத்தியமற்ற விடயங்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தப்போவதில்லை என்றார். இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் நிலத் தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்காது. இந்தியாவுடன் நட்புறவை கையாள பாலம் அமைக்க வேண்டிய அவசியமும் இல்லை என அவர் தெரிவித்தார்.










