ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது.!
சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடைபவனி இன்று வியாழக்கிழமை (10) காலை மன்னாரில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்கொலைத் தடுப்பு என்பது மருத்துவர்கள், ஆலோசகர்கள் அல்லது நிறுவனங்களின் பொறுப்பு மட்டு மல்ல. அது குடும்பம், நண்பர்கள், பாடசாலைகள், மத நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் என சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பின் இயக்குனர் சந்தியோகு கொண்சன்டைன் தெரிவித்தார்.
உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் “வாழ்வைக் கொண்டாடுவோம் – கதையை மாற்றுவோம்” என்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் உங்களுடன் இணைந்து நிற்பதில் பெருமை கொள்கிறேன்.
இன்று நாம் தற்கொலை பற்றி மட்டும் பேசுவதற்காக ஒன்று கூடவில்லை. வாழ்வு, நம்பிக்கை, அன்பு, கருணை மற்றும் ஒருவரையொருவர் பாதுகாக்க வேண்டியது எமது சமூகப் பொறுப்பு பற்றி பேசுவதற்கு ஒன்று கூடியுள்ளோம்.
எமது இன்றைய தொனிப்பொருள் சிந்தனைப் போக்கை மாற்றுவோம்” என்பதாகும். ஒவ்வொரு உயிரும் பெறுமதியானது. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையுடன் வாழ்வதற்கான உரிமை உள்ளது. எவரும் தமது வாழ்க்கைப் போராட்டங்களை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை.
தற்கொலை என்பது ஒரே ஒரு காரணத்தினால் ஏற்படுவதில்லை. பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, குடும்பப் பிரச்சினைகள், குடும்ப வன்முறை, மதுபாவனை, தனிமை, சமூகத் தனிமைப்படுத்தல், கல்விசார் அழுத்தம், கொடுமைப் படுத்தல் மற்றும் சிகிச்சை பெறாத மனநலப் பிரச்சினைகள் போன்ற பல காரணிகள் ஒருவரின் மனநலத்தை பாதிக்கக்கூடும்.
இலங்கை கடந்த பல தசாப்தங்களில் தற்கொலை வீதத்தைக் கணிசமாகக் குறைந்திருந்தாலும், இது தொடர்ந்து முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.
தற்கொலைத் தடுப்பு என்பது மருத்துவர்கள், ஆலோசகர்கள் அல்லது நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமல்ல. அது குடும்பம், நண்பர்கள், பாடசாலைகள், மத நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.
சில நேரங்களில் “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என்ற ஒரு சிறிய கேள்வியும், அன்புடன் செவிமடுப்பதும், ஒரு ஆறுதலான வார்த்தையும் ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்றக்கூடிய நம்பிக்கையின் ஒளியாக மாறலாம்.
மன்னார் மாவட்டத்தில், நாம் புள்ளிவிபரங்களை மட்டும் பார்க்காமல், அவற்றின் பின்னால் உள்ள மனிதர்களைப் பார்க்க வேண்டும்.
பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், குழந்தைகள், இளைஞர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்ட வர்கள், தனிமையில் வாழ்பவர்கள் மற்றும் சுகாதார சேவைகளை எளிதில் அணுக முடியாத சமூகங்கள் எமது சிறப்பு கவனத்திற்குரியவர்கள்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் மனநல பிரிவு மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் சேவை அளப்பரியது. அதேவேளை, மனநல சேவைகள் நெருக்கடி ஏற்பட்ட பின்னர் மட்டுமல்லாமல், நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு மக்களை சென்றடையும் வகையில் சமூக மட்டத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சும் இணைந்து பாடசாலை அடிப்படையிலான மனநலம், வாழ்க்கைத் திறன் மற்றும் ஆலோசனை சேவைகளை வலுப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான நட்பான ஆலோசனை சேவைகள் மற்றும் பரிந்துரை, தொடர் கண்காணிப்பு முறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பெற்றோர்களே, தீர்ப்பளிக்காமல் கேளுங்கள், ஆசிரியர்களே – அமைதியாகி, தனிமைப்படும் குழந்தையை கவனியுங்கள்.
இளைஞர்களே – உதவி கேட்பது பலவீனம் அல்ல; அது தைரியம். நாம் அனைவரும் – அவமானத்தை புரிந்துணர்வாகவும், மௌனத்தை உரையாடலாகவும் மாற்றுவோம்.
மன்னாரிலிருந்து இலங்கை முழுவதற்கும் இன்றைய நடைபயணம் ஒரு தெளிவான செய்தியை வழங்கட்டும்.
“ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது. ஒவ்வொருவரும் கேட்கப்படுவதற்கு தகுதியானவர்கள். நம்பிக்கை இழப்பதற்கு முன்பே உதவி கிடைக்க வேண்டும்.
எனவே, மௌனத்திலிருந்து உரையாடலுக்கு, அவமான உணர்விலிருந்து புரிந்துணர்வுக்கு, தனிமையிலிருந்து இணைப்புக்கு, விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கு நாம் பயணிப்போம்.
வாழ்வைக் கொண்டாடுவோம். எமது குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதுகாப்போம். குடும்பங்களை வலுப்படுத்துவோம். அவமானத்திலிருந்து ஆதரவிற்கும், மௌனத்திலிருந்து உரையாடலுக்கும், விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கும் கதையை மாற்றுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.