கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!
கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது.
தற்போது அடிக்கடி இவ்வாறான நிலை ஏற்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் சிவனடிபாத மலை பருவ காலத்திற்கு முன்பே சிவனடிபாத மலைக்கு பொறுப்பான இரத்தினபுரி பெல்மடுல்ல ரஜமஹா விகாரையின் தேரர் பெங்கமுவே தம்மதின்ன அவர்கள் சிவனடிபாத மலைக்கு உக்கும், உக்கா பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை எப் பகுதிகளிலும் உக்கும், உக்கா பொருட்களை விட்டு செல்ல வேண்டாம் எனவும் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வெறும் கையுடன் வந்து சமன் தெய்வத்தை தரிசனம் செய்து விட்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரிகள், லக்ஷபான இராணுவ முகாம் அதிகாரிகள், அதிரடி படையினர், நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கடும் முயற்சி எடுத்து வந்த போதிலும் இவ்வாறு கழிவுகள் விட்டு செல்லும் நிலை அன்மை காலங்களில் அதிகரித்து வருகிறது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் உருவான இந்த சிவனடிபாத மலை எமது அடுத்த சந்ததிக்கு விட்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆகவே சிவனடிபாத மலைக்கு செல்லும் போது எவ்விதமான உக்கும், உக்கா பொருட்களையும் கொண்டு செல்ல வேண்டாம் என சிவனடிபாத மலைக்கு பொறுப்பான இரத்தினபுரி பெல்மடுல்ல ரஜமஹா விகாரையின் தேரர் பெங்கமுவே தம்மதின்ன அவர்கள் கேட்டுக் கொண்டார்.
நேற்று முன்தினம் முதல் இலங்கை விமானப்படை அதிகாரிகள் இப் பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் உள்ள குப்பைகளையும் ஏற்கனவே சரிந்து போக்குவரத்து தடை ஏற்பட பகுதிகளையும் சீர் செய்து வருகின்றனர்.