சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
பிரபலங்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக வெளியிடுவது தற்போது புதிய போக்காக மாறியுள்ளது. இதற்காக பதிப்பகங்கள் சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்குவதுடன், புத்தக விற்பனையிலும் பங்குகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் இணைந்து சுயசரிதை ஒன்றை எழுதி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் சுயசரிதை எழுதும் பணியில் இணைந்துள்ளார்.
பிரபல இந்தி பத்திரிகையாளர் ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சுயசரிதையை எழுதி வருகிறார்.
இந்தப் புத்தகத்திற்கு “ரஹ்மான்: எ ரினைசன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. ‘ரினைசன்ஸ்’ என்பதற்கு ‘மறுமலர்ச்சி’ என பொருள்.
இது தொடர்பில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பித்துள்ளதாகவும், ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து “ரஹ்மான்: எ ரினைசன்ஸ்” என்ற புத்தகத்தை எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரூபா சக்ரவர்த்தி இந்தப் புத்தகத்தின் இணையாசிரியராக செயற்படுவதாகவும், தனது உலகை வடிவமைத்த இசை, சிந்தனைகள், சவால்கள், ஆளுமைகள் மற்றும் படைப்பாற்றல் பயணம் உள்ளிட்ட விடயங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
புத்தகம் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.