மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது.!
வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த லேகியம் உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) முற்றுகையிட்டதுடன் அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400 ற்கும் மேற்ப்பட்ட லேகியப் பக்கற்றுகள் அங்கு கைப்பற்றப்பட்டதுடன் 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த லேகியம் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
