வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டிய கல்விக் கண்காட்சியானது இன்றையதினம் கல்லூரியில் ஆரம்பமாகியது.
இன்று ஆரம்பமாகிய இந்த கண்காட்சியானது நாளையும் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு, நாடா வெட்டி வைக்கப்பட்டு கண்காட்சியானது ஆரம்பமானது.
அதன்பின்னர் விருந்தினர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இதன்போது மாணவர்கள், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து ஏனையோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில் மாணவர்களின் கல்வி பாடத்திட்டம் தொடர்பான பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கல்லூரியின் முதல்வர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.யூட்ஸ் கருணாகரனும், சிறப்பு விருந்தினராக சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் FX பெனின் றொசானும், கௌரவ விருந்தினர்களாக வலி தெற்கு பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரி வி.லம்போதரனும், வட்டுக்கோட்டை சமுர்த்தி வங்கி முகாமையாளர் நீ.அகிலனும், யாழ். போதனா வைத்தியசாலை தாதிய சேவை உத்தியோகத்தர் வி.திவாகரனும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், அயற் பாடசாலை ஆசிரியர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








