இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு : பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் சஜித்
இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளால் பாதிக்கப்பட்டு, கொழும்பு – பொல்துவ சந்தியில் இன்று அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்களின் கனவைச் சிதைக்கும் வகையில் இடம்பெறும் இந்த முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பதாக உறுதியளித்தார்.
இலங்கை – இஸ்ரேல் அரசுகளுக்கிடையில் 2023ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 70% தொழிலாளர்கள் அரசாங்க ஊடாகவும், 30% தொழிலாளர்கள் தனியார் துறை ஊடாகவும் அனுப்பப்பட வேண்டும். ஆனால், தற்போது இந்த நிலை முற்றிலும் மாற்றப்பட்டு, அரசு அனுப்ப வேண்டிய 70% பகுதி தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு பாரிய மோசடியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
அரசின் ஊடாகச் செல்லும் ஒரு தொழிலாளிக்கு 4 இலட்சம் ரூபா செலவாகும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்பும்போது சுமார் 45 இலட்சம் ரூபா வரை செலவாகின்றது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் ஒரு நபரிடமிருந்து 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலாபமாக ஈட்டுவதுடன், இஸ்ரேல் செல்லக் காத்திருக்கும் 3 ஆயிரத்து 500 இளைஞர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுடனான பேச்சுகளை மீண்டும் நடத்தி, ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டவாறு 70% சதவிகிதத்தினரை அரசின் ஊடாக (குறைந்த செலவில் – 4 இலட்சம் ரூபாவில்) அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
சாதாரண மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிய தற்போதைய அரசு, இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் 3 ஆயிரத்து 500 பேரின் எதிர்காலத்தைப் பாதுகாத்து அவர்களுக்குரிய நீதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.






