வடக்கில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு 79.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிய இருமாடி கட்டிடங்கள்.!
வட மாகாணத்தில் உள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில், 79.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய இருமாடி கட்டிடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில் அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்றது.
மாகாண குறிப்பிட்ட அபிவிருத்தி மானிய (PSDG) நிதி ஒதுக்கீட்டின் கீழ், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் மற்றும் வெலிஓயா எதாவெட்டுணுவௌ வித்தியாலயம் ஆகியவற்றிற்காக இந்த இருமாடி கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்காக 40.5 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையான வகுப்பறைகளுடன் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வெலிஓயா எதாவெட்டுணுவௌ வித்தியாலயத்திற்காக 39 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன், வட மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பெட்ரிக் நிரஞ்சன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




