மோசடியில் ஈடுபடும் அதிபர்; ஆசிரியர்கள், பெற்றோர்கள் முறைப்பாடு.!
பளை இந்து ஆரம்ப வித்தியாலய அதிபர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்தவகையில், இவர் பாடசாலையின் நிறைவேற்று குழு ஊடாக வரும் நிதிகளை முறைகேடாக பயன்படுத்துவதுடன் அந்த நிதிகள் தொடர்பில் நிறைவேற்று குழுவில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
அத்துடன், நிறைவேற்று குழுவின் பொருளாளராக கடமை புரிபவர் இவருக்கு சார்பாக செயற்படுபவர் என்பதால் எந்தவொரு கணக்கும் செய்து முடித்த பின்பு அதை ஆமோதிப்பதற்கு பாடசாலை நிறைவேற்று குழுவிடம் வழங்குவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவர் தனக்கென்று குறுகிய பெற்றோர் வட்டத்தை வைத்து அவர்களுடன் தொலைபேசியில் தகாத முறையில் குறுஞ்செய்தி இடுவது வாட்ஸ்அப்பில் பேசுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் இது தொடர்பில் கேள்வி கேட்கும் பெற்றோர்கள் மீது பழி போடுவது, பாடசாலையின் எந்தவொரு செயற்பாட்டிலும் பங்குபற்றவிடாமல் விலக்கி வைப்பது, அவர்களது பிள்ளைகளை கண்டிப்பது, பழி வாங்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் பல முறைப்பாடுகளை தினகரன் புலனாய்வு செய்தியாளர்களிடம் வழங்கியுள்ளனர்.
அத்துடன், இவர் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுப்பதுடன் பாடசாலை கல்வி செயற்பாட்டை விடுத்து பூங்கா அமைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் இவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் சில ஆசிரியர்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதுடன் ஒத்துழைக்காத ஆசிரியர்களுக்கு பொறுப்புகளை வழங்காமல் ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.