கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!
தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து தங்காலை திசையை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வண்டி ஒன்றும், தங்காலை பகுதியில் இருந்து மாத்தறை நோக்கிச் சீமெந்து மூட்டைகளை ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த வேளையில் சொகுசு ஜீப் வாகனத்தில் ஐவரும், பாரவூர்தியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவருமாக மொத்தம் 07 பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 07 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் மாத்தறை – ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 37, 36 வயதுடையவர்கள் ஆவார்.
இதேவேளை, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான சொகுசு ஜீப் வாகனத்தை இளைஞர்கள் குழுவொன்று ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுப் பயணித்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக ஜீப் வண்டியும் பாரவூர்தியும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மாத்தறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

