இந்தியாவில் கன மழை – 19 பேர் பலி!
இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 8 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜௌரி பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் இராணுவ வீரர்களும் மாநில அவசரகால மீட்புக் குழுவினரும் இணைந்து 5 சிறுவர்கள் உட்பட 11 பேரை மீட்டுள்ளனர்.
நாகலாந்தின் மோன் மாவட்டத்திலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அடுத்த இரண்டு நாட்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பைக் கருதி அமர்நாத் மற்றும் வைஷ்ணோ தேவி ஆலயங்களுக்கான வருடாந்த புனித யாத்திரைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.