அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு!
அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள, வருடத்தில் இருமுறை கடிகார நேரத்தை மாற்றியமைக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பகல்நேர சேமிப்பு நேரத்தை (Daylight Saving Time) ஆண்டு முழுவதும் நிரந்தரமாக்குவதற்கான சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் பெருவாரியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 308 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டமூலம் அடுத்த கட்டமாக செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கடிகார நேரத்தை மீண்டும் சாதாரண நிலைக்கு (Standard Time) மாற்றும் வழக்கம் இல்லாது போகும்.
எனினும், மாநிலங்கள் விரும்பினால் இந்த முழு ஆண்டு பகல்நேர சேமிப்பு நேர நடைமுறையிலிருந்து விலகிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு இருமுறை நேரத்தை மாற்றுவது மக்களின் தூக்க சுழற்சியைப் பாதிப்பதுடன், பணியிட மற்றும் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கும் வழிவகுப்பதாக இந்த சட்டமூலத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குளிர்கால மாதங்களில் மாலையில் கூடுதல் பகல் வெளிச்சம் கிடைப்பது வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவித்து, பொருளாதாரத்துக்குப் பக்கபலமாக அமையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த மாற்றத்திற்குத் தனது பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, குடியரசுக் கட்சி செனட்டர் டொம் காட்டன் உள்ளிட்ட விமர்சகர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த மாற்றத்தினால் குளிர்கால காலப் பகுதிகளில் சூரிய உதயம் ஒரு மணித்தியாலம் தாமதமாகும் என்றும், இதனால் நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிறுவர்கள் அதிகாலை இருட்டிலேயே பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 1974ஆம் ஆண்டும் எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்ட போதிலும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட பலத்த அதிருப்தி காரணமாக அதே ஆண்டில் அது ரத்து செய்யப்பட்டது.
தற்போது அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அரிசோனா மாநிலங்கள் இந்த பகல்நேர சேமிப்பு நேர நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்பதுடன், புதிய சட்டமூலம் இறுதியாகச் சட்டமாக்கப்படுவதற்கு முன்னர் செனட் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது.