வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகள்; வீதி திருத்தப் பணியாளர்கள் கடும் அவதி.!
தொண்டமானாறு – அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும் கழிவுகளால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீதியின் திருத்த வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் போதிலும், பிரதேசவாசிகள் சிலர் தங்களது வீட்டுப் பாவனைக் கழிவுகளை வீதியோரங்களில் கொட்டி வருவதால், அவ்விடங்களில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால், நாள் முழுவதும் வீதியில் நின்று வேலை செய்யும் பணியாளர்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளுக்கும், வேலை செய்ய முடியாத அளவிற்கான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கழிவுகள்
பணியாளர்களின் குற்றச்சாட்டுகளின்படி, வீதியோரங்களில் சாதாரணமாக வீசப்படும் குப்பைகளுக்கும் அப்பால், மனிதக் கழிவுகள் மற்றும் சிறுவர்களின் மலசலக் கழிவுகள், (Diapers) இறந்த மிருகங்களின் உடலங்கள் மற்றும் மிருகக் கழிவுகள் போன்ற ஆபத்தான கழிவுகள் வீசப்படுவதால், கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் தங்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, பொதுமக்களே இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களும், சுகாதார பிரிவினரும் உடனடியாக தலையிட வேண்டும் எனப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீதியோரங்களில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த அவல நிலைக்கு மிக விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
