பிரித்தானிய ஆட்சி கைமாறிய பின்னர் தமிழர்கள் வலிந்து வஞ்சிக்கப்படுகின்றார்கள்.!
பிரித்தானியரிடம் இருந்த இத்தீவு கைமாற்றப்பட்டதன் பின்னர் சாண் ஏற முழம் சறுக்கும் வகையில் ஈழத் தமிழர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவருவதுடன், கடந்த எழுபது ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் ஆட்சியாளர்களால் வலிந்து வஞ்சிக்கப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் 08.07.2026 நேற்று கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்
என்பவற்றை அங்கீகரிக்கும் விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்
என்பவற்றை அங்கீகரிக்கும் இன்றைய விவாதப் பொழுதிலே சமத்துவ அனுபவங்களுக்குச் சவாலாகும் சில விடயங்களையே இங்கும் முன்வைக்க விரும்புகிறேன்.
வங்கிச் சேவைகளும் பணம் மற்றும் மதிப்பு மாற்றும் சேவைகளும் இன்னமும் கிடைத்திராத பிரதேசங்கள் பல வன்னிப் பிராந்தியத்தில் உண்டு.
பிரித்தானியரிடம் இருந்த இத்தீவு கைமாற்றப்பட்டதன் பின்னர் சாண் ஏற முழம் சறுக்கும் வகையில் பல்வேறு சவால்களை ஓர் இனமாக ஈழத்தமிழர்கள் நாம் எதிர்கொண்டிருந்தோம்.
1950 களில் எமது மொழி உரிமை பறிக்கப்பட்டது. 1950கள், 70 கள், 80களில் எம் மீது பல்வேறு திட்டமிட்ட தாக்குதல்கள் இனக்கலவரங்களாக கட்டவிழ்த்து விடப்பட்டன. இத்தீவு முழுவதும் பரந்து விரிந்து கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சிபெற்ற எங்களின் சொத்துகள் எரித்து நாசமாக்கப்பட்டன. வடகிழக்கின் எல்லையோரங்களில் இருந்து வலிந்து எம் இனம் அப்புறப்படுத்தப்பட்டது.
பொதுநூலக எரிப்பு, கறுப்பு யூலை, கல்வித் தரப்படுத்தல், நடைமுறைப்படுத்தப்படாத அரசியல் உடன்படிக்கைகள், தமிழர்களுக்குத் தீர்வளிக்காத அரசியல் யாப்புகள், விடுதலைப்புலிகளின் தோற்றமும் பல நாடுகளின் உதவியுடனான மௌனிப்பும், இறுதிப்போரின் உயிர், உடைமை இழப்புகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரல், சொந்த நிலத்திலும் ஏதிலிகளாகி பொருளாதார மீள் கட்டமைப்பிலும் பிராந்திய வேறுபாடுகளுக்குள் அகப்பட்டு கடந்த எழுபது ஆண்டுகளாக வலிந்து வஞ்சிக்கப்படும் இனமாக ஈழத்தமிழர்களாக நாமும் சமத்துவ அளவீடுகள் இன்னமும் பொய்த்துப்போகும் பிராந்தியமாக, எமது வன்னி மண்ணும் தொடர்ந்தும் தக்கவைக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று அங்கீகரிக்கப்படவிருக்கும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் முறையற்ற பணப்பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் அமையலாம். நாட்டின் பொருளாதார ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தலாம். இவ்வாறான இறுக்க நிலைகளில் நிறுவனங்கள் தம்மை தகவமைத்துக்கொள்ளும் போது அதன் விளைவுகள் நேரடியாக சேவை பெறுநர்களைச் சார்ந்துவிடும்.
மேற்படியான அங்கீகரிப்பின் பின்னர்,
பணம் மற்றும் மதிப்புமாற்றச் சேவைகளுக்கான சேவைக்கட்டணங்கள் உயர்வடையலாம், பண மாற்று விகிதங்களில் மறைமுகமான குறைப்புகள் இடம்பெறலாம், பணப் பரிமாற்றத்துக்கான குறைந்த தொகை உயர்வடையலாம், சேவை வழங்கல் நகர்ப்புறங்களை மட்டும் சார்ந்திருக்கலாம்.
இவ்வாறான அடுக்கு விளைவுகள் யாவும் இறுதிப் பயனரையே மட்டுப்படுத்திவிடும்.
பாடநூல்களைத் தாண்டியும் இலத்திரனியல் நடைமுறைகள் எங்கள் பிள்ளைகளிடமும் வளர்ந்தோரிடமும் கிராமம் தோறும் சென்றடையும் வகையில் நிதிச் சேவைகளை விரிவுபடுத்த வகை செய்யுங்கள் என இப்பேரவை ஊடாக நிதி அமைச்சைக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.