உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை.!

3 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையின்போது அரச பாதுகாப்பில் இருந்த கைதிகள் உயிரிழந்தமை மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை ஆகிய சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியவை என்றும், அவை மிகவும் துரதிர்ஷ்டவசமானவை என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது மற்றும் இதற்கான பின்னணி என்ன என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்காக ஆணைக்குழுவின் ஆராய்ச்சி, விசாரணை, மறு ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவுகளைச் சேர்ந்த சட்ட மற்றும் மனித உரிமைகள் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன் அங்குணகொளபெலஸ்ஸ, கண்டி போகம்பறை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு விசேட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, நிலைமையை அமைதிப்படுத்தவும் தகவல்களைத் திரட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இட நெருக்கடி மற்றும் குறைபாடுகள் குறித்து முன்னரே அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கைதிகளுக்குப் போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சாதாரண குற்றவாளிகள், பாரிய குற்றவாளிகள் மற்றும் அபராதம் செலுத்த முடியாதவர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கைதிகள் மேலும் மோசமான குற்றங்களுக்குப் பழகும் அபாயத்தை உருவாக்குகின்றது. எனவே, சிறைச்சாலை கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வறுமையின் காரணமாக அபராதத்தைச் செலுத்த முடியாதவர்கள் சிறை செல்வதைத் தவிர்க்க, அபராதத் தொகையைத் தவணை முறையில் செலுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் குறித்து அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும். மேலும், கைதிகளை வகைப்படுத்தும் முறையான வேலைத்திட்டமும் அவசியமாகும்.” – என்றார்.

சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகளை மாற்றியமைக்கத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அரசு ஏற்கனவே குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

15 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

22 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

18 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

19 1 0