டெங்கு நோயினால் 45 பேர் உயிரிழப்பு.!
இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என்று அந்தப் பிரிவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாடு முழுவதும் உள்ள 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு பரவல் அதிகம் உள்ள அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மழையுடனான காலநிலை நிலவுவதால், கொசுக்கள் பெருகும் இடங்களைச் சுத்தப்படுத்துவது மிக அவசியமாகும்.
வீடு மற்றும் அலுவலகச் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுவதன் மூலம் மாத்திரமே இந்த நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
தொடர் காய்ச்சல், தலைவலி அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவத்தைத் தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை நாடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” – பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்குப் பரவல் அபாயத்தை உணர்ந்து, பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.