நீர்கொழும்பு சிறை மோதல்; உயிர்நீத்த ஏழு அதிகாரிகளுக்கும் நீதி அமைச்சர் கண்ணீர் அஞ்சலி.!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன ஆகியோர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த ஏழு அதிகாரிகளின் பூதவுடல்கள், இன்று காலை ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் மற்றும் அதிகாரிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேரில் சென்ற அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். இதன்போது, நாட்டுக்காகத் தமது கடமையின் போது உயிர்நீத்த அதிகாரிகளின் தியாகத்தைக் கண்டு அமைச்சர் மனமுருகி விம்மி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உயிரிழந்த அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு மலர் வளையங்கள் வைத்து இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, ஏழு அதிகாரிகளின் பூதவுடல்களும் இறுதிக்கிரியைகளுக்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.








