முகநூல் விருந்தில் அதிரடி முற்றுகை; போதைப்பொருட்களுடன் 15 பேர் கைது.!
எல்ல – வெல்லவயா பிரதான வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு நேர விருந்து உபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 15 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த விசேட விருந்து நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா வலயமான எல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை இடம்பெறுவதாகப் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸாரின் விசேட அதிரடிப் பிரிவு அதிகாரிகள் இணைந்து அந்த விடுதியை முற்றுகையிட்டு விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்தச் சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் ஹெரோயின், ‘ஐஸ்’ மற்றும் பல்வேறு வகையான போதை மாத்திரைகளைத் தங்களது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த 15 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நாட்டின் முக்கிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் அடங்குகின்றனர் என்று தெரியவருகின்றது.
இருப்பினும், இந்த விசேட கைது நடவடிக்கையினால் விடுதியில் நடைபெற்ற ஒட்டுமொத்த விருந்து நிகழ்ச்சிக்கும் எவ்வித இடையூறுகளோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று பொலிஸ் உயர்தரப்பு அதிகாரிகள் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸாரும் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.