நீர்கொழும்பு சிறையில் மோதல்; பாதுகாப்பு கேட்டு கூரையேறிய கைதிகள்.!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் சிறைச்சாலை வளாகத்துக்குள் கைதிகள் இரு பிரிவாகப் பிரிந்து பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்தத் திடீர் வன்முறைச் சம்பவத்தை அடுத்து, ஒட்டுமொத்த சிறைச்சாலை வளாகத்திலும் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தாக்குதலில் காயமடைந்த கைதிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் பலத்த காயங்களுக்குள்ளாகியிருந்த இரு கைதிகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த மேலும் இரு கைதிகள் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கொழும்பிலுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டனர். ஏனைய 33 கைதிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இந்த மோதல் வெடித்ததைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதன் காரணமாகத் தங்களது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என அச்சமடைந்த பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கட்டடக் கூரை மீதேறித் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டது. அவர்களைத் தொடர்ந்து ஆண் கைதிகள் குழுவொன்றும் சிறைச்சாலை கூரையின் மீதேறித் தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறைச்சாலைக்குள் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. அங்கு பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
இந்தக் கொடூர மோதல் மற்றும் அதன் பின்னணிக் காரணங்கள் குறித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவலைக் கைதி ஒருவர் வெளிப்படுத்திய சம்பவமே இந்த மோதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.