காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை.!
காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் நேற்று (25) மீட்கப்பட்டிருந்தது.
குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் குப்பைகளை உண்பதற்காக நடமாடி திரிந்த நிலையில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வளத்தாப்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
12 வயதுடைய குறித்த பெண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு வளத்தாப்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்புப் பொறுப்பாளரான அஜித் குணரத்ன உள்ளிட்ட குழுவினர் சென்று ஆய்வு செய்தனர்.
இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யானையின் உடலை மீட்டுள்ளதுடன் யானை உயிரிழந்தமைக்கான காரணம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த யானை மீதான பிரேத பரிசோதனை தொடர்பில் அம்பாறை வனவிலங்கு சுகாதாரப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று (26) இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையில் யானை இறப்பிற்கான காரணம் கண்டறியப்பட உள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் காரைதீவு பொலிஸாரும் இணைந்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.