ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்.!
கொழும்பின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், விரிவான புதுப்பிப்பு பணிகளுக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நிலவி வந்த பயணிகள் நெரிசல், வசதிகளின் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு சீர்கேடு போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், இந்த நிலையம் முழுமையான மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் காத்திருப்பு பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரங்களைத் தெளிவாகக் காட்டும் டிஜிட்டல் தகவல் பலகைகள்நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் வசதிக்காக உணவகங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் வணிக நிலையங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.இந்தப் புதுப்பிப்பு திட்டம், கொழும்பு நகரின் போக்குவரத்து முகாமையை மேம்படுத்துவதுடன், நகரின் அடிப்படை வசதிகளை நவீனமயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் இந்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 424 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதலாவது தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாவது தளம் சாரதிகள் மற்றும்நடத்துனர்களுக்கான ஓய்வு அறைகளாகவும், மூன்றாவது தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.
மேலும், அனைத்து வகையான போக்குவரத்து சேவைகள் குறித்த தகவல்களை பெறுவதற்கான தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக செயல்படவுள்ள இந்த பேருந்து நிலையம், பொதுமக்களுக்கு சுலபமானதும் பாதுகாப்பானதுமான பயண அனுபவத்தை வழங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.