தொடருந்து கட்டண உயர்வை தவிர்க்க கோரிக்கை – தொடருந்து அதிபர்கள் சங்கம்.!
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், ரயில் பயண கட்டணங்களை எந்த விதத்திலும் அதிகரிக்க வேண்டாம் என இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடி மற்றும் பேருந்து கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் தற்போது தொடருந்து போக்குவரத்தையே சார்ந்து வருகின்றனர் எனக் கூறினார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் போக்குவரத்து சேவையை வழங்குவது ரயில்வே திணைக்களத்தின்முக்கிய பொறுப்பாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தொடருந்து சேவையை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.தற்போதைய நெருக்கடியான சூழலில் ரயில் கட்டணங்களை உயர்த்துவது, பொதுமக்களை மேலும் பொருளாதார சுமையில் தள்ளும் என சங்கம் எச்சரித்துள்ளது.