வெடுக்குநாறி மலை ஆலய வீதி புனரமைப்பு – மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு.!
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒலுமடு கிராமத்தில் உள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதி, 3 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சுமார் 2 கிலோமீட்டர் நீளமான இவ்வீதியானது கிரவல் வீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் பேரில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புனரமைக்கப்பட்ட வீதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் நேரில் பார்வையிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், 2027 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வீதியை கார்பெட்வீதியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கை, ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கும், பிரதேச மக்களுக்கும் பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.